Kjærlighet // கூடிவிளையாடு பாப்பா

SFoto: Pixabayang om kjærlighet mellom menneske og dyr

Denne sangen skrevet av en kjent forfatter Barathyar og sangen handler om  kjærlighet ovenfor mennesker og dyr.

 

 

 

 

ஓடி விளையாடு பாப்பா! – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! – ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா!.

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

 

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா! – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா! – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!

வேத முடையதிந்த நாடு – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.