Gresskartyven // குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

Foto: PixabayDenne fortellingen handler om en tyv som stjal gresskar fra hagen til andre. En smart mann som jobbet for kongen klarte å fange tyven på en smart måte.

ஒரு கிராமம் ஒன்றில் பலர் பெரிய தோட்டம் செய்து வந்தனர். அவர்கள் இரவுபகலாக அயராது உழைத்து வந்தனர்.அவர்களது கடுமையான உழைப்பிற்கு பயன் கிடைத்தது. காய்கறிகள், மரங்கள் எல்லாம் காய்த்துக் குலங்கின.

தோட்டத்திலிருந்த காய்கறிகள் களவு போகத் தொடங்கின. அவர்களிற்கு யார் தமது காய்கறிகளைத் திருடுவது எனத் தெரியவில்லை. கந்தன் என்பவனது தோட்டத்தில் பெரிய நீத்துப் பூசனிக்காய் காய்த்திருந்தது. அதனை இரவோடிரவாக யாரோ திருடி விட்டனர். கவலையடைந்த கந்தன் அரசனிடம் சென்று முறையிட்டான்.
அரசன் தனது அமைச்சரிடம் கள்வனை கண்டுபிடிக்கக் கட்டளையிட்டார். அமைச்சர் கிராமத்து மக்களை வரும்படி அழைத்தார். எல்லோரையும் வரிசையாக வரும்படி கூறினார். வருபவர்களின் தோளில் வெள்ளைச் சாம்பல் படிந்திருக்கிறதா எனப் பார்க்கத்தொடங்கினார். ஏதும் விளங்காத மக்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டனர். நீத்துப் பூசனிக்காயின் மேல் படிந்திருக்கும் சாம்பல் கள்ளனின் தோளில் படிந்திருக்கும். அதனாலேயே இப்படிச் செய்கிறேன் என்றார்.
எல்லோரும் அப்படியா எனக் கூறிவிட்டு தமது தோளைக் காட்டினர். ஆனால் ஒருவன் மட்டும் தனது தோளை தான் வைத்திருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினான். அவன் தான் நீத்துப் பூசனிக்காயை திருடிய கள்வன் என அமைச்சர் கைது செய்தார். அவனும் தனது திருட்டை ஒத்துக் கொண்டான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.