Fortelling om jegeren // வீமா ஓடி வா

Illustrasjon: PixabayDenne forteliingen handler om en jeger som vil jakte et ekorn med  hunden sin, men som endte opp med at hunden rev av skjegget til jegeren. 

ஒரு ஊரில் ஒரு வேடன் இருந்தான். அவனுக்குப் பெரிய தாடி இருந்தது. அவனிடம் வீமா என்றொரு நாயும் இருந்தது. ஒரு நாள் வேடன் தன் நாயுடன் வேட்டைக்குப் போனான்.

அங்கே ஒரு அணிலைக் கண்டான். அணிலிற்கு வேடனின் பெரிய தாடி போல் பெரிய அடர்ந்த வால் இருந்தது.
வேடன் அந்த அணிலைப் பிடிக்க எண்ணினான். உடனே தனது நாயை “வீமா வீமா ஓடி வா, ஓடி வா” எனக் கூப்பிட்டான். வீமாவும் ஓடி வந்து அணிலை விட்டுத் துரத்தியது. அணில் ஓடிப் பாய்ந்து சென்று ஓர் மரப்பொந்தில் புகுந்து மற்றைய பக்கத்தால் வெளியே ஓடி விட்டது.
வேடன் பொந்துக்கு வெளியே அணில் போனதைக் காணவில்லை. அவன் பொந்துக்கு உள்ளே அணில் நிற்பதாக எண்ணினான். அணிலைப் பிடிக்க தலையை பொந்துக்குள்ளே விட்ட படியே “வீமா வீமா ஓடி வா ஓடி வா” என நாயைக் கூப்பிட்டான். ஓடி வந்த நாயும் பொந்துக்கு மற்றைய பக்கம் வால் போல் தெரிவதைக் கண்டது. உடனே கௌவிப் பிடித்து அதனை இழுத்து அறுத்து விட்டது. ஐயோ ஐயோ எனக் கத்திக் கொண்டு பொந்தின் வெளியே தலையை எடுத்த வேடுவனின் தாடியைக் காணவில்லை.
நாய் அணில் என்று நினைத்து வேடனின் தாடியை அறுத்து விட்டது. வேடனின் தாடியும் போச்சு, அணிலும் போச்சு.